மீன் விற்க அனுமதி நாகர்கோவிலில் இறால் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்ற மக்கள்
" alt="" aria-hidden="true" />
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் குமரி மாவட்டத்தில் மீன் சந்தைகள் மூடப்பட்டன. அதே சமயத்தில், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் பஸ்நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் புதிதாக சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. இதில், கெட்டுப்போன மீன்கள் மற்றும் ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து நாகர்கோவிலில் மீன்கள் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களிலும் மீன் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதனால் மீன் பிரியர்களான குமரி மக்கள் மீன் உணவு சாப்பிட முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் மீன் வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகமும், மீன்வளத்துறையும் இணைந்து நடமாடும் மீன் அங்காடிகள் மூலம் மீன் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.
மீன் அங்காடிகள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நாகர்கோவில் மாநகரில் தற்போது செயல்படும் தற்காலிக சந்தைகளில் செயல்படும் என்றும், நடமாடும் மீன் அங்காடிகளில் அரை கிலோ, 1 கிலோ என்ற அடிப்படையில் மீன்கள் பொட்டலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், அவற்றில் மீன்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், சரலூர் மீன் சந்தை, கன்கார்டியா பள்ளி மைதானம் ஆகியவற்றில் செயல்படும் சந்தைகளில் லாரிகள், சரக்கு வேன்கள் மூலம் நடமாடும் மீன் அங்காடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அங்காடிகளை தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு கடல் உணவு நிறுவனம் நடத்தியது.